search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை எம்.பி. தொகுதி"

    புதுவை எம்.பி. தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்று தி.மு.க. பதிலடி கொடுத்துள்ளது.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள் பாராளு மன்ற தேர்தலுக்கு தயாராகும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    புதுவை எம்.பி. தொகுதியில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் கூறியிருந்தார்.

    மேலும் புதுவை எம்.பி. தொகுதியை தி.மு.க.வுக்கு விட்டு கொடுக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார். இதற்கு புதுவை எம்.பி. தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்று தி.மு.க. பதிலடி கொடுத்துள்ளது.

    புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    எம்.பி. தொகுதியை விட்டுத்தர மாட்டோம் என காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் கூறியதால், நாங்களும் கருத்து கூற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    புதுவை லோக்சபா தேர்தலில் தி.மு.க. போட்டியிடுவது உறுதி. அதற்காக புதுவையில் இருந்து சென்னை வரை அங்கபிரதட்சணமாக சென்று கூட கட்சி தலைமையிடம் வலியுறுத்த நிர்வாகிகளும், தொண்டர்களும் தயாராக உள்ளோம். முதல்-அமைச்சர் நாராயணசாமி, ராஜ்ய சபாவுக்கு சென்றதும், 2009-ம் ஆண்டு லோக் சபாவுக்கு சென்றதும் தி.மு.க. கூட்டணியால்தான்.

    அதே போன்று மோகன் குமாரமங்கலம், சண்முகம், பரூக் என காங்கிரஸ் எம்.பி.யாக இருந்தவர்கள் தி.மு.க. கூட்டணி தயவில் தான் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் எம்.பி.க்கள் இதுவரை கூட்டணி தயவின்றி வெற்றி பெற்றது கிடையாது.

    புதுவை எம்.பி. தொகுதியை கேட்கும் உரிமை காங்கிரஸ் கட்சிக்கு எப்படி உள்ளதோ, அதே போல் எங்களுக்கும் தொகுதியை கேட்க உரிமை உள்ளது. கண்டிப்பாக வரும் லோக்சபா தேர்தலில் தொகுதியை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

    இவ்வாறு சிவா கூறினார்.

    இது தொடர்பாக தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார், கூறும் போது, தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் தெரிவிக்க முடியாது என்றார்.

    புதுவையில் கூட்டணியில் உள்ள காங்கிரஸ்- தி.மு.க. இருகட்சிகளுமே புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிட குறி வைத்திருப்பது கூட்டணியில் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சிக்கும் புதுவை எம்.பி. தொகுதியை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை கூட்டணி கட்சிகள் இணைந்து சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராகவே உள்ளது. புதுவை பாராளுமன்ற தொகுதி பாரம்பரியமாக காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியாகும்.

    தி.மு.க. உள்ளிட்ட எந்த கட்சிக்கும் புதுவை எம்.பி. தொகுதியை விட்டுக் கொடுக்க மாட்டோம். என்.ஆர். காங்கிரசிடம் இருந்து புதுவை தொகுதியை மீட்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இதனால், எங்கள் தொகுதியை ஏன் மற்றவர்களுக்கு விட்டுத்தர வேண்டும்?

    அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், புதுவை மாநில பொறுப்பாளருமான முகுல் வாஷ்னிக் வருகிற 5-ந் தேதி புதுவை வருகிறார். அப்போது மாவட்ட தலைவர்கள், வட்டார தலைவர்கள், மாநில பிரதிநிதிகள் பட்டியலை அறிவிக்கிறார்.

    உள்கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட வட்டார, மாவட்ட தலைவர்கள் பட்டியலுக்கு ஏற்கனவே அகில இந்திய காங்கிரஸ் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தலைமை தேர்தல் ஆணையாளரை நியமிக்க உள்ளோம். இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த கோப்பு தற்போது கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. மற்றும் பிற கூட்டணி கட்சிகளுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்கவும் காங்கிரஸ் தயாராகி வருகிறது.

    இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் எம்.பி.யாக உள்ளார்.

    ×